Tuesday 3 November 2015

சகி


 

சகிப்புத்தன்மை இல்லாத உயிரினங்களே இல்லை எனலாம்.  சகிப்புத்தன்மை அனைவரிடமும் உள்ளது ஆனால், அதன் அளவிலும் தன்மையிலும் தான் வேறுபாடு உள்ளது.  அதற்கு கால சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.  அதுமட்டுமின்றி தங்கள் எண்ணங்களை எல்லோரும் ஏற்றுகொள்ளவேண்டும் என்ற மனப்பான்மையும் சகிப்புத்தன்மைக்கு தடையாக உள்ளது.  அதேவேளையில் சகிப்புத்தன்மைக்கு ஒரு எல்லையும் உள்ளது.  மொத்தத்தில் ஒருவரது எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை  எக்காரணங்கொண்டும்  மாற்றிக் கொள்ள வேண்டும் என நாம் கூறக்கூடாது.  நாம் எவ்வாறு உணர்ச்சிக்கு சிக்கிக் கொள்கிறோமோ அதேபோல் தான் மற்றவர்களும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  ஒவ்வொருவரையும் தன் நிலையில் வைத்தும், அவர்களது கண்ணோட்டத்தில் வைத்தும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். 

தவறான புரிதலே பெரும்பாலான பிரச்சனைகளின் தோற்றுவாய். 

எல்லோரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால், இவ்வுலகில் எப்பிரச்சனைகளும் எழாது.  ஆனால், இது நடைமுறை சாத்தியமற்றது என நீங்கள் வினவுவது புரிகிறது.  இருந்தாலும் இதை நாம் பின்பற்றி சோதித்து பார்ப்போமே.  சகிப்புத்தன்மையிலிருந்து விடுபட்டு நாம் செயல்படும்பொழுது நம் ஆற்றல்கள் தான் வீணடிக்கப்படுகின்றன.  இன்றைக்கு எல்லோருக்கும் எத்தனையோ பொருப்புகள், கடமைகள், கனவுகள் உள்ளது அதை நாம் விட்டுவிட்டு நடுவில் கிளம்பும் பிரச்சனைகளின் பயனித்தால் நாம் எவ்வாறு நம் இலக்கினை அடைய முடியும். 

 

இவ்வுலகில் எல்லா உயிர்களும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதால் தான்  இன்று இத்தனை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியால் பல்கிப் பெருகி இருக்கின்றன.  மாறாக அவ்வுயிரினங்கள் செயல்பட்டிருந்தால் இன்று மனித இனமே இந்த மாபெரும் வளர்ச்சியினை எட்டியிருக்காது. 

 

நீங்கள் உங்களுக்கு எதிராக செயலாற்றுபவரை சகித்துகொண்டு சிறிது காலம் செயலாற்றிபாருங்கள், அவர் உங்களுக்கு கொடுக்கும் தொந்தரவுகள் சிறிது சிறிதாக குறைத்து விடுவார். 

 

நாம் உணர்ச்சிவயப்பட்டு செய்த செயல்களை சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அல்லது நீங்கள் கடந்த காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் செய்தவற்றை நினைத்து பார்த்தீர்களேயானால், உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும்.  தவறு யார்பக்கமோ இருக்கட்டும் அதற்கு முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது போதுமானது.  அப்படி செய்தும் நடவடிக்கை இல்லை என்றால்  அதற்கு அடுத்த வழிமுறையை கையாள்வது தான் சரியாக அமையும்.  இவ்வாறு நடந்துகொண்டால் நாம் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமும் இருக்காது.  நம் செயல்களிலும் இலக்குகளை அடைவதிலும் எந்த சுனக்கமும் இருக்காது. 

 

Monday 2 November 2015

கோழி ஈ

கோழி முட்டை மற்றும் இறைச்சியில் உயர் தரமான புரோட்டீன், தாதுப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் சாதாரண உணவு வகையில் இருப்பதற்கு சமமாக உள்ளது. கோழியின் உரம் அதிக அளவு மற்றும் தன்மை தரக்கூடியது. இதைப் பயன்படுத்துவதால் அனைத்து பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கலாம். ஆனால், இந்த கோழிப் பண்ணைகள் பெரும்பாலும் கிராமபுறங்களிலேயே அமைக்கப்படுகின்றன.  மாசில்லா கிராமப்புறங்களில் பெருமளவில் இப்பண்ணைகள் நோய் பரப்பும் தொழிற்கூடங்களாகவும், அருகிலுள்ள கிராம மக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன.  முட்டை, கோழி தேவை என்பதற்காக கோழிப்பண்ணைகளை கிராமப்புறங்களுக்கு அருகில் அமைத்து அக்கிராம மக்களை சுகாதாரமற்றவர்களாக ஆக்குவது நியாயமா?

கோழிப்பண்ணைகளில் இருந்து எண்ணிலடங்கா ஈக்கள் தினமும் உற்பத்தியாகின்றன.  அவைகள் அருகிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்கின்றன.  எங்கு பார்த்தாலும் வீடுகளில் ஈக்கள் மொய்த்து அவரவர் வீடுகளில் இருப்பதற்கு அவர்களையே தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகின்றன.  புகாரளித்து கிராமபுறங்களுக்கு அருகில் இருக்கும் கோழிப்பண்ணைகளை இழுத்து மூட போராடுபவர்களுக்கு எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக அத்தகைய கோழிப்பண்ணையாளர்கள் அரசு வங்கிகளில் பெரும் தொகையை கடன் பெற்றுள்ளோம், இப்பொழுது மூடிவிட்டால் அத்தகைய தொகையை நான் எப்படி திரும்ப கொடுப்பேன் என பதிலை தயார்படுத்திவைத்துள்ளார்கள்.  மாசில்லா கிராமபுறங்களையும் இப்படி மாசடைய செய்வது தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 


ஈ தமிழில் இருசிறகிகள்
இவற்றின் வாய் அமைப்பு பெரும்பாலும் உறிஞ்சும் அமைப்பு கொண்டதாகவும், ஒரு சிலவற்றில் துளைக்கவோ, கடிக்கவோ ஏற்ற அமைப்பு கொண்டதாகவும் உள்ளன.  இருசிறகிகள் என்பன மிகப்பெரிய உயிரின வரிசை ஆகும். இதில் ஏறத்தாழ 240,000 வகை இனங்கள் அடங்கும்.  இருசிறகிகள் (ஈ-கொசு வரிசை உயிரிகள்) உலகம் முழுவதிலும் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகள் முதல் வடமுனையின் கீழ்ப்பகுதிகள் வரையிலும் உள்ள நிலப்பகுதிகளிலும், உயர் மலைப்பகுதிகளிலும், கடலிலும் கூடக் காணப்படுகின்றன. இவை பரும அளவில் பெரும்பாலும் அரை மில்லிமீட்டர் முதல் 40 மிமீ வரை காணப்படுகின்றன, ஆனால் சில 70 மிமீ வரையிலும் இருக்கும். 
 
இருசிறகிப் பூச்சிகள் தொன்மங்களிலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் மிகப்பெரிய பத்து தொற்று நோய்களில் ஒன்றான நாலாம் தொற்றுநோய் இந்த இருசிறகிப் பூச்சிகளால் வந்ததாக பதியப்பட்டுள்ளது. 
 
ஒரு நபருக்கான முட்டை இருப்பு 41 முட்டைகளாக தற்போது உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பரிந்துரைப்படி ஒரு வருடத்திற்கு ஒரு நபருக்கு 182 முட்டைகள் தேவைப்படுகிறது.  ஆதலால் கோழிப்பண்ணைகள் அவசியம் தான்.  அவைகளை மக்கள் வசிப்பிடமான கிராமங்களுக்கு அருகில் இருத்தல் கூடாது.
 
கூடாரத்தை ஈக்கள்/ கொசுக்கள் மொய்க்காமல், கூடாரத்தை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  ஆனால் ஈக்களை கட்டுப்படுத்துவதில் பெரும்பாலான கோழிப்பண்ணைகள் தோல்வியடைந்துள்ளன. 

ஒவ்வொரு பகுதி வளர்ந்த கோழிகளை அகற்றும் போதும், அதனுடைய மாசுபடிந்த கழிவுகள் மற்றும் உரத்தை அகற்ற வேண்டும். சுவர்கள் மற்றும் தரையை சுத்தப்படுத்த வேண்டும். சுவரை சுண்ணாம்பு கரைசலுடன் 0.5% மாலத்தியான் அல்லது டி.டி.டி திரவம் கலந்து வெள்ளையடிக்க வேண்டும்.  கூண்டு அமைப்பு வைப்பதாக இருந்தால், கோழியின் எச்சங்களை பரப்பி, அதனுடன் சுண்ணாம்புத் தூள் அல்லது 10% மாலத்தியான் தெளிப்பு மாதத்திற்கு 2 முறை தெளித்து ஈக்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம். கூண்டிற்கு அடியில் உள்ள எச்சங்களை 6 மாதங்களுக்குப் பிறகு அகற்றிவிட வேண்டும்.  அனைத்து கருவிகளையும் 0.5% மாலத்தியான் கொண்டு ஒவ்வொரு பகுதி பறவைகள் வெறியேற்றும் போதும், சுத்தமாக கழுவி, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும்.  போன்ற விதிமுறைகளில் பெரும்பாலனவற்றை கோழிப்பண்ணைகள் பின்பற்றினாலும் அதனால் ஈக்கள் கிராமப்புறங்களில் தொல்லை கொடுப்பது நீங்குவதில்லை. 

மாசில்லா கிராமங்களை, கிராம மக்களை இவ்வாறு சுகாதர சீர்கேடு அடைய செய்வதை கட்டுப்படுத்துவது மிக அவசியமான ஒன்று.

Tuesday 27 October 2015

தொலைக்காட்சி தொடர்களே இது நியாயமா?

தொலைக்காட்சிகளில் விதவிதமான எத்தனையோ நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.  ஆனால், தொடர்களுக்கு இருக்கும் இடத்தை எந்த புதிய நிகழ்ச்சிகளாலும் ஆக்கிரமிக்க முடியவில்லை.  தொடர்கள் பெரும்பாலான வீடுகளில் பிரிக்க முடியாதவையாக மாறிவிட்டது.  அவைகளால் நன்மைகளை விட தொந்தரவுகள் நாள் தோறும் பெருகிகொண்டே இருக்கின்றன.  குறிப்பாக ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மறந்து மகிழவே தொலைக்காட்சியை நாடுகிறோம்.  ஆனால், தொலைக்காட்சிதொடர்கள் செயற்கையான கதையில் நம்மையும் சேர்த்து நாம் விரும்பியோ, விரும்பாமலோ பினைக்கப்பட்டு அவர்கள் பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பித்து நம் வேலைகளில் தொய்வு தான் ஏற்படுகிறது. 


இந்த தொலைக்காட்சி தொடர்கள் எத்தனையோ பயனுள்ள தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நம்மை புறக்கணிக்க வைக்கிறது. 
அதுமட்டுமல்லாது எவ்வாறு எல்லாம் சதி செய்து கொள்ளலாம் நம் எண்ணங்களை நிறைவேற்ற என நமக்கு தெரியாமலேயே நமக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறது.  கலை, கலாச்சாரம் எல்லாம் எங்கே போகும் இவ்வாறே நீடித்தால்? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் என விழாக்காலங்களில் மட்டும் போட்டுகொண்டால் போதுமா என்ன. 


இவர்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தால் போதுமா, சமூகத்திற்கு நன்மை நடந்தால் என்ன, தீமை நடந்தால் என்ன என்று இருக்கும் ஊடகங்களை எப்பொழுது புறக்கணிக்குமோ இந்த உலகம். 

இதே தொலைக்காட்சிகள் நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தினால், நாம் பார்க்காமல் இருப்போமா என்ன.   மகாபாரதம், இராமாயணம் ஊடகங்களில் காட்சிபடுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் அவை இரண்டை தவிர வேறு நம் தமிழ் இலக்கியங்களை காட்சிபடுத்தி மக்கள் மனத்தில் நிறுத்தலாம்.  அப்படி செய்தால் எக்காலத்தும் அவர்களை தமிழ் சமுதாயம் போற்றும். 

நம் நூல்கள் அனைத்தும் பிற்காலத்திலாவது தொலைக்காட்சிகளில் காட்சிபடுத்தப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு தமிழ் மீது உள்ள எண்ணம் மாறும் தமிழ் கற்க எல்லையில்லா ஆர்வம் பெருகி கற்பார்கள்.

நன்றி! 

Friday 16 October 2015

தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?



தொனி அடையாளம் நம்மை மெருகேற்றுமா?

 

ஒவ்வொருவருக்கும் ஒரு தொனி அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்.  இந்த தொனி ஒரு சிலருக்கு சாதகமாகவும், மற்றவர்களுக்கு சற்றே பாதகமாகவும் வீன் விமர்சனங்களையும் தருவதாகவும் அமையும்.  தொனியால் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் மிகுதியான தொடர்பு உள்ளது.  நம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருப்போம்.  சிலரை நினைத்தால் நம் மனதில் ஒரு நல்ல வகையான எண்ணங்கள் தோன்றும்.  சிலரை நினைத்தாலோ, இல்லை அவர்களை பற்றி பேசினாலோ ஏன்டா அவரைப் பற்றி இப்பொழுது நினைவுபடுத்துகிறாய் என நாம் கேட்போம். 

 

ஒரு வகுப்பாசிரியர் தினமும் பாடம் தொடங்குமுன் அறிவுப்பூர்வமான, அதே வேளையில் நகைச்சுவையாக ஒரு கதையையோ, நிகழ்வினையோ கூறிவிட்டு அன்றைய பாடத்தை தொடங்குவார், பாடத்தை முடிப்பதற்குள் அனைத்து மாணவர்களிடத்தும் கலந்துரையாடி விடுவார்.  சில நாட்களிலேயே அவர் அந்த வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஆனார்.  இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அவரின் முகமும் தொனியும் அம்மாணவர்களுக்கு இனிமையானவைகளாக இருக்கும்.  மற்றொரு ஆசிரியர் மாணவர்களை வகுப்பறையில் நான் அனுமதித்தால் தான் எழ வேண்டும், வினா எழுப்ப வேண்டும் என்றும், நன்றாக படிக்கும் மாணவர்களை முன்னுதாரணமாக எப்பொழுதும் கூறிக் கொன்டு, பின் தங்கிய மாணவர்களை எப்பொழுதும் இழிவாக நடத்தி கொண்டும் இருந்தார்.  அவரை நெருங்கவே மாணவர்கள் அஞ்சும் பொழுது மாணவர்களின் ஐயப்பாடுகள் எவ்வாறு தெளிவடையும்.  அவரை நினைத்தாலே எவ்வாறு மனத்தினுள் அம்மாணவர்களுக்கு இனிக்கும்.  இவ்வாறு தொனிக்கு தகுந்தவாறு நம் செயல்களின் விளைவுகள் நிச்சயம் மாறும். 

 

வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களை சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அவர்களின் தொனியின் தனித்தன்மை உங்களுக்கு நிச்சயம் புரியும்.  இவ்வுலகில் ஒருவருடைய தொனியை மற்றொருவரால் சிறப்பாக செயல்படுத்த முடியாது.  நம் தொனியை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், நம் செயல்களை நாம் சில நாட்கள் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.  நாம் எச்செயலை எவ்வாறு செய்தால், பிறர் நமக்கு எவ்வாறு பதில்வினை ஆற்றுகிறார்கள் என காணல் வேண்டும்.  கண்ட பின்பு நமக்கு சாதகமானவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும், பாதகமானவற்றை ஒரேயடியாக கைவிடல் என்பது சாத்தியப்படாதது.  அவற்றை சிறிது, சிறிதாக ஒவ்வொன்றாக புறக்கணிக்கப் பழக்கப் படுத்திவிட்டால்.  நம் தொனி மேம்படும். 

 

நம் தொனி மேம்பட்டுவிட்டால், நாம் நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய சமூகப் பார்வைகளை உயர்வடையச் செய்துவிடலாம்.   நமக்கு என்று ஒரு சிறப்பான தொனி அடையாளம் கிடைத்துவிடும்.  இத்தொனி அடையாளமே நம்மைப் பற்றிய மற்றவர்களின் எண்ணங்களை மேம்பாடடைய செய்துவிடும்.  அதன் விளைவாக, அவர்கள் பதில் வினை ஆற்றும் பொழுது, நமக்கு பாதகமான பெரிய பாதிப்புகள் ஏற்படாது. 

 

இவ்வாறாக நம்மில் ஒவ்வொருவரிடமும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இத்தொனியை மேம்படுத்தினால் நிச்சயம் நம்மை மெருகேற்றிக் கொள்ளலாம். 

நன்றி!

Tuesday 13 October 2015

வேண்டும் தமிழா? இல்லை வேண்டும் தமிழா!

      சரியான புரிதலே ஒருவரை பண்படுத்தும். இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படை நாதமாக அமைவது தவறான புரிதலே ஆகும். 

       ஆங்கிலத்தை அரைகுறையாக பேசும் பொழுது நாம் வெட்கப்படுகிறோம்.  அதேவேளையில், நம் தாய்மொழியை பேசும்பொழுது மட்டும் இடையிடையே ஆங்கிலத்தையோ அல்லது வேறு மொழியினையோ கலந்து பேசுவதை ஒரு கௌரவமாக கொள்வது ஏன்?  ஆங்கிலம் உலக மொழி, ஆதலால், அது கற்க வேண்டும், தொழில் மொழி அது ஆதலால் அதை கற்க வேண்டும் என்றால், தாராளமாக கற்று கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள் தவறில்லை.  நம் பாரதியார் பல மொழிகளை கற்று தேர்ந்தவர் தான் என்பதையும் நாம் இங்கே நினைவுகூற வேண்டும். 

      எதுவாயினும் நாம், நம் தமிழை மறக்கக் கூடாது, வாசிக்காமல் இருக்கக் கூடாது.  நான், உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன், தினமும் ஐந்து நிமிடங்களாவது நாளிதழ்களை தமிழில் படியுங்கள்.  நம் தமிழ் சொந்தங்கள், பல்வேறு நாடுகளில் தமிழ் பரப்பும் அதேவேளையில் சில நாடுகளில் தமிழர் என்ற அடையாளம் தகர்க்கப்படுகிறது.  ஏனென்றால், தமிழை ஒரு கலாச்சார மொழியாக ஏதோ ஒரு கூடுதல் மொழியாகத்தான் கற்கிறார்களேயன்றி தாய்மொழி, முதல் மொழி என்று கொள்வதில்லை.  இதற்கு எல்லாம் என்ன காரணம் என நீங்களே அறிவீர்கள். 

     நம் தாய் தமிழ் நாட்டிலேயே தமிழ் வழி கல்வி இனி அரசு பள்ளிகளில் மட்டும் தான் இருக்கும்.  ஆனால், எத்தனை பெற்றோர்கள் தனது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விளைகிறார்கள்?  இவ்வாறே சென்றால் யார் தான் தமிழை பயில்வது? 

     1835ல் மெக்காலே பிரபுவால் புகுத்தப்பட்ட ஆங்கில வழி கல்வியின் தாக்கம் 180 ஆண்டுகளிலேயே இவ்விளைவினை ஏற்படுத்தியுள்ளது.  இன்னமும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொத்தோமேயானால், என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்! 

      தமிழ் எங்கு இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது.  தமிழகத்தில் எத்தனையோஅரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன.  ஆனால், தமிழுக்காகவே இருக்கும் தஞ்சை, தமிழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.  அப்போது புரியும்.  ஏனென்றால், பறந்து விரிந்து ரம்யமான இயற்கை சூழலில் இருக்கும் தமிழ் பல்கலைக்கழகத்தில் மற்ற பல்கலைகழகங்களில் இருப்பதை போன்று இப்பல்கலைகழகத்தில் காண்பது அரிது.  மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து கொன்டே வருவதால், பல்வேறு
பாடப் பிரிவுகள் நீக்கப் படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழும் தமிழராகிய நாமும் நம் தனித் தன்மையை இழந்து விடுவோம்.

 இனி நம் முன் உள்ள சவால்கள்

இனையதளங்களில் ஓரளவாவது, ஒவ்வொருவரும் தமிழை பத்து சதவீதமாவது பயன்படுத்துவோம்.
மென்பொருள் உருவாக்கத்தில் மிக பொருந்தக் கூடிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழை மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்துவோம். 
பல்வேறு மென்பொருட்களில் பல்வேறு
மொழிகள் உள்ளன.  அவற்றுடன் தமிழும் இல்லை என நாம் நிச்சயம் ஆதங்கப்பட்டிருக்கிறோம். 
ஆதலால், நாம் அவ்வாறான மென்பொருட்களை தகவல், தொழில்நுட்பத்துறையில் உள்ள நம் தமிழர்கள் உருவாக்கி உதவ வேண்டும். 
மென்பொருட்கள் உபயோகபடுத்தும் பொழுது தமிழ் மொழி உள்ள மென்பொருட்களை உபயோகபடுத்த வேண்டும். 

படித்தமைக்கு நன்றி! நம் தமிழ் சொந்தமே!  

மா.பி. குமார்